இராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று மதியம் நடைபெறவிருக்கும் நிலையில், இராமர் கோவிலை குண்டு வைத்துத் தகர்ப்பதாக மிரட்டல் விடுத்த இன்டெகாப் அலாம் என்கிற நபரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை விழா ஆகியவை இன்று மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் நடைபெறவிருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்கிறார். இதையொட்டி, நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8,000 வி.வி.ஐ.பி.க்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, அயோத்தி நகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த சூழலில், அயோத்தி கோவிலை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பேன் என்று மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். அதாவது, பொதுமக்கள் அவசர உதவிக்காக அழைக்கும் காவல்துறையின் 112 எண்ணுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்திருக்கிறது.
மறுமுனையில் பேசிய நபர், தனது பெயர் சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் அயோத்தி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, மர்ம தொலைபேசி அழைப்பில் பேசிய நபரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்து பீகார் மாநிலம் அராரியா மாவட்ட எஸ்.பி. அசோக் குமார் சிங் கூறுகையில், “ஜனவரி 19-ம் தேதி மர்ம நபர் ஒருவர், பொதுமக்கள் அவசர உதவி கோர பயன்படுத்தும் 112 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து, தனது பெயர் சோட்டா ஷகீல் என்றும், தான் தாவூத் இப்ராஹிமுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறினார்.
மேலும், ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் அயோத்தி இராமர் கோவிலை வெடிக்கச் செய்வேன் என்றும் மிரட்டல் விடுத்தார். பின்னர், அந்த அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து விசாரணை செய்து, அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
அந்த நபர், பீகார் மாநிலத்தின் அராரியா மாவட்டத்தை சேர்ந்த இன்டெகாப் அலாம். 21 வயதாகும் இவர் மீது எந்த குற்றப் பின்னணியும் இல்லை. அதேசமயம் மனநலம் பாதிக்கப்பட்டவரைப் போல தெரிகிறார்” என்று கூறினார்.