மத்திய அமைச்சர்கள் அயோத்தி இராமர் கோவிலுக்குச் சென்று பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கி இருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், இராமர் கோவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா, கும்பாபிஷேகம், இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை ஆகியவை கடந்த 22-ம் தேதி நடைபெற்றன. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராமரை பிரதிஷ்டை செய்தார்.
இதையடுத்து, நேற்று முதல் இராமரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. முதல் நாளான நேற்று மட்டும் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதனால், அயோத்தி நகரமே ஸ்தம்பித்திருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசுகையில், “தற்போது அயோத்தி இராமர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆகவே, அமைச்சர்கள் யாரும் இப்போது அயோத்தி இராமர் கோவிலுக்குச் செல்ல வேண்டாம்.
ஏனெனில், மத்திய அமைச்சர்கள் செல்லும்போது பக்தர்களின் தரிசனம் தடைபடும். இது பக்தர்களுக்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே, மத்திய அமைச்சர்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு இராமர் கோவிலுக்கு செல்லலாம்” என்று கூறியிருக்கிறார்.