உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேற்கத்திய பத்திரிகையாளருக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும். போரை முடிவுக்கு கொண்டு வரவும் தயாராக இருப்பதாகவும், உக்ரைன் தரப்பு தனது பேச்சுவார்த்தையை நிராகரித்ததன் மூலம் தவறு செய்ததாகவும் கூறினார்.
இஸ்தான்புல்லில் உக்ரைன் பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருக்க வேண்டும். ஆனால் பிரிட்டன் பிரதமர் ஜான்சனின் தலையீட்டால் அந்த வாய்ப்பை தவறி விட்டோம் என அவர் தெரிவித்தார். இனிமேல் மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் தான் அமைதி குறித்து சிந்திக்க வேண்டும்.
இன்றைய நிலவரத்தை புரிந்து கொண்டு, நாட்டின் நலனுக்காக போரிடும் ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் போட வேண்டும். ரஷ்யாவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. உக்ரைனுக்கு, அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி போரை தூண்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
உக்ரைனுக்காக, அமெரிக்கா, போலந்து, ஜார்ஜியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினரும் போராடி வருவதாகவும் அவர் கூறினார். 1991ம் ஆண்டிற்கு பிறகு, ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள தவறிவிட்டன. பொருளாதார ரீதியாக வளர்ந்து வருவதால், ரஷ்யாவை காட்டிலும் சீனா மீது மேற்கத்திய நாடுகளுக்கு பயம் வந்துவிட்டது என்றும் புடின் தெரிவித்தார்.