பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநில சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் மோதல் போக்கு நிலவி வந்தது. பீகாரில் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த லாலுவின் மகள், தனது சமூக வலைத்தள பக்கத்தில் நிதிஷ்குமாரை கடுமையாக சாடி பதிவிட்டார்.
இதனையடுத்து கூட்டணியில் முறித்துக்கொள்ள நிதிஷ்குமார் திட்டமிட்டார். பின்னர் அவருக்கு பாஜக ஆதரவு அளித்தது.இதனைத்தொடர்ந்து முதலவர் பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜக ஆதரவுடன் ஜனவரி 29ஆம் தேதி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். இந்நிலையில் முதலமைச்சர் நிதிஷ் குமார் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.
243 பேர் கொண்ட பீகார் சட்டசபையில், ராஷ்டீரிய ஜனதா தளத்திற்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து பாஜகவுக்கு 78 உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 19 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக, ஜேடி(யு), ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ஒரு சுயேச்சை உள்ளிட்ட 128 எம்எல்ஏக்களின் ஆதரவை தேசிய முற்போக்கு கூட்டணிக்கு உள்ளதாக கூறப்படுகிறது. ஆர்ஜேடி-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 114 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தெரிகிறது. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஹைதராபாத்தில் தங்கி இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை பாட்னா சென்றனர். ஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இடதுசாரி கட்சி எம்எல்ஏக்கள் நேற்று மாலை முதல் பாட்னாவில் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.