பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
2024 மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.
இன்றும் நாளையும் இரு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று பிற்பகல் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நாடு முழுவதிலும் இருந்து 11,500 செயற்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல், மக்களவை தேர்தல் வியூகம், மாநிலங்களில் கூட்டணிகளை உறுதி செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அயோத்தியில் ராமர் கோவில், பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை, ஜி20 மாநாடு உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் நிலை, பொருளாதாரம் குறித்த இரு தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.