பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக பாரதம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சர்வதேச பொருளாதாரத்தில் பல முக்கிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
உலக பொருளாதார வரிசையில் ஜப்பான் மூன்றாவது இடம் வகித்து வந்தது.பொருளாதார மந்தநிலை காரணமாக தற்போது ஜப்பான் 3-வது இடத்திலிருந்து சரிந்து 4-வது இடத்திற்குச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து, அவற்றின் நுகர்வு 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. ஜப்பானின் எரிபொருள் தேவையில் 94 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதிக்கான செலவு கூடி இருப்பதன் காரணமாக பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது.
ஜப்பானின் சரிவுக்கு வயதான மக்கள்தொகை, எதிர்மறையான வளர்ச்சி, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. ஜப்பானின் மத்திய ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் (Bank of Japan), வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், கரன்சியின் மதிப்பு பெரிதும் குறைந்தது.
இதேபோல் ஜெர்மனி நாட்டின் பொருளாதாரமும் 2023 இல் 0.3 சதவிகிதம் சுருங்கியுள்ளது.இது 2024ஆம் ஆண்டு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனப் பொருளாதாரம், 2024ல் 4.6 சதவீதமாகவும், 2025ல் 4 சதவீதமாகவும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023ல்பொருளாதாரம் 5.6 சதவீதமாக விரிவடைந்திருந்தாலும், கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் சீனப் பொருளாதார வளர்ச்சியை குறைந்துவிட்டன.
அதேநேரத்தில் பருவமழை முன்னறிவிப்பு மிகவும் சாதகமாக இருப்பதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 – 7 சதவீதமாக தொடரும் என கூறப்படுகிறது. வலுவான உள்நாட்டு நுகர்வு, பொருட்கள் மற்றும் சேவைகளின் விரிவாக்கம் மற்றும் ஆரோக்கியமான மூலதன வரவு என இந்தியப் பொருளாதாரச் சக்கரம் சீராக உள்ளது.
இந்தப் பின்னணியில், 2027க்குள் ஜப்பான் மற்றும் ஜெர்மனி இரண்டையும் பின்னுக்குத் தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக பாரதம் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.