உத்தரப்பிரதேச மாநிலத்தில் 80 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் சண்டௌலியில் மக்களவை தேர்தல் தொடர்பான பாஜக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனுராக் தாக்கூர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லவும், கட்சி அமைப்பை வலுப்படுத்த இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பிரதமர் மோடியின் கூற்றுப்படி மக்களவை தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது நமது கடமை. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
சுமார் 4 தலைமுறைகளாக உத்தரப்பிரதேச மாநில மக்கள் நேரு மற்றும் காந்தி குடும்பத்திற்கு வாக்களித்தனர். ஆனால் தற்போது அவர்களை கேட்பார் யாரும் இல்லை. எனவே அவர்களுக்கு விரக்தி ஏற்படுவது இயல்பு என்றும் அவர் கூறினார்.
ராமரை அவமதிப்பது,சனாதன தர்மத்தை நசுக்குவது, வடக்கு,தெற்கு என பேதம் பார்ப்பது என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்து விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டினார்.