நாடாளுமன்ற தேர்தலில் 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என்பதற்கு வலுவூட்டும் வகையில், தென்னிந்தியாவில் இருந்து அதிக இடங்கள் கிடைக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சரும், நாக்பூர் பாஜக வேட்பாளருமான நிதின் கட்கரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது, மக்களவை தேர்தலில் பாஜக 370க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போதைய 288 இடங்களை விட கூடுதல் இடங்கள் தென்னிந்தியாவில் வரும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த மாநிலங்களில் நாங்கள் மிகவும் குறைவான இடங்களை பெற்றிருந்தோம். இம்முறை தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் சிறப்பாக செயல்படுவோம். வட இந்தியாவில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என கூறினார்.
எனவே, பாஜக தனித்து 370 இடங்களைப் பெறும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களை கடக்கும் என்று நினைக்கிறேன். மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளை மோடி அரசு ஆயுதமாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர், பாஜகவின் போட்டியாளர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் துன்பங்களைச் சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார்.
நாங்கள் சொந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏஜென்சி தங்கள் வேலையை செய்துகொண்டு இருக்கின்றன என நிதின் கட்கரி தெரிவித்தார்.