அன்னமாச்சார்யாவின் 521வது பிறந்த நாள் திருப்பதியில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தாளப்பாக்கம் கிராமத்தில் 1408 ஆம் ஆண்டு பிறந்தவர் அன்னமாச்சார்யா.
இவர் தென்னிந்திய இசையில் ஏராள மான மரபுகளைத் தோற்றுவித்து, 32,000 கீர்த்தனைகளையும் இயற்றியவர். பஜனை மரபைத் தொகுத்து வழங்கியவர் என்ற சிறப்பு பெற்றவர்.
பாடல்களில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற வடிவம் இவரால்தான் உருவாக்கப்பட்டது. இவரது பல கீர்த்தனைகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் பிரதிபலிப்பாக உள்ளன. இவர் ராமானுஜர் மீதும் பல பாடல்களை இயற்றியுள்ளார்.
இவர் ‘இறைவன் ஒருவனே. அவன் பாரபட்சம் இல்லாதவன். சாதி, நிறம், ஏழை, பணக்காரன் என்று எந்த வேறுபாடுகளும் இல்லாத தெய்வீகத் தொடர்புதான் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு’ என்று தனது ‘பிரம்மம் ஒக்கடே’ பாடலில் எழுதியுள்ளார். தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளில் ஏராளமான பாடல்களை இயற்றினார்.
அன்னமாச்சார்யா 95-வது வயதில் 1503 மறைந்தார். இவர் திருமலை ஏழுமலையான் மீதி அதீத பக்திகொண்டவர். இந்நிலையில் அவரது 521வது பிறந்த நாள் திருப்பதியில் உள்ள அலிபிரி பாத மண்டபத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
காலை 6 மணி முதல் அன்னமாச்சார்யா திட்டக் கலைஞர்கள் மற்றும் பஜனை மண்டல கலைஞர்கள் அன்னமாச்சாரியாரின் “சப்தகிரி சங்கீர்த்தன கோஸ்திகானம் நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.
திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் ஏப்ரல் 5 ஆம் தேதி கோஷ்டிகானம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஏப்ரல் 6 முதல் 8 வரை மூன்று நாட்களுக்குத் திருப்பதியில் உள்ள அன்னமாச்சார்யா -கலாமந்திரம், தல்லாபாகாவில் உள்ள தியான மந்திரம் ஆகிய இடங்களில் இலக்கிய கருத்தரங்குகளும், அவரின் சொந்த ஊரில் பக்தி இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது.