திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை திமுக நிர்வாகிகளே தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறது. ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில், திசையன்விளையில், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஊராட்சித் தலைவர் ஜெகதீஷ் தலைமையில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இதற்கு திமுக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ஜான் கென்னடி உள்ளிட்டோர், தேர்தல் பொறுப்பாளர்களை மாவட்டச் செயலாளர்தான் நியமிக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால், இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், இரு தரப்பும் மோதிக்கொண்டனர்.
ஒரு கட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தாக்க ஒரு கும்பல் பாய்ந்து சென்றது. இதனால், பாதுகாப்பு கருதி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.