யூடியூபர் சவுக்கு சங்கரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் யூடியூபர் சவுக்கு சங்கர் அவதூறு கருத்துகளை தெரிவித்தாக கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், தேனியில் தங்கியிருந்த விடுதியில், சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தாக கூறி, சவுக்கு சங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் கடந்த 4ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், ஜாமின் வழங்கக்கோரி யூடிபர் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மே 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செங்கமலச்செல்வன் உத்தரவிட்டார்.