“ஈபிஎஸ் மற்றும் வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பதாக தோன்றுகிறது” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கடந்த 2019 -ம் ஆண்டு அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால் இன்று வரலாறு காணாத தோல்வி கிடைத்துள்ளது” என்றார்.
பாஜகவில் இணைந்திருந்தால் வெற்றி பெற்றியிருப்போம் என அதிமுகவினர் கூறியதற்கு, “கண் கெட்ட பிறகு, சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள்” என அண்ணாமலை விமர்சித்தார். “அதிமுக தனியாக இருந்து ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லை” என்றும், “அப்படி இருக்கையில் எப்படி 30 சீட்டுகள் கிடைக்கும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என வேலுமணி சொல்லுவது அவர்களது உட்கட்சி பூசல் விவகாரம்” என்றும், “கூட்டணியில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லை என்றால் ஒரு பேச்சு பேசுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசியவர், “கோவை மக்கள் அதிமுகவை முற்றிலும் நிராகரித்து விட்டார்கள் என்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது” என்றும், “பாஜகவிற்கு விரைவில் நல்ல காலம் வரும் என்பதால், தொண்டர்கள் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்” என அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.