நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே டெண்டர் வழங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது.
பொதுவாக அரசுப்பணிக்கான ஒப்பந்தங்களை எடுப்பவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், ஒரு ஒப்பந்ததாரர் மீது மற்றொரு ஒப்பந்ததாரர் தாக்கத்தை ஏற்படுத்தி ஒப்பந்தப் புள்ளிகளில் முறைகேடு செய்வதற்கான சாத்தியம் உள்ளது.
எனவே அரசுப்பணிக்கு ஒப்பந்தம் வழங்கும் போது இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும். ஆனால் இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் சில டெண்டர்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது தணிக்கை அறிக்கை.
இந்திய தணிக்கைத் துறை தலைவரின் 2023-ஆம் ஆண்டுக்கான அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 35 டெண்டர்களை மாதிரியாக எடுத்து ஆய்வு செய்த போது, அந்தப் பணிகள் ஒரே குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை 27 டெண்டர்களையும், நீர்வளத்துறை சேலம் நிர்வாக பொறியாளர் ஆறு டெண்டர்களையும் இவ்வாறு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தந்தையும் மகனும் ஒரே முகவரி மற்றும் மொபைல் எண்ணுடன் 27 டெண்டர்களில் பங்கேற்றுள்ளனர். அதில் 20 டெண்டர்கள் ஒரே இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
சேலம் நீர்வளத்துறை நிலத்தடி நீர் பிரிவு, தேசிய நீரியல் திட்டத்தின் கீழ் உலக வங்கி உதவியுடன் வெளியிட்ட ஆறு டெண்டர்கள், விதிகளை மீறியும் உலக வங்கியின் கொள்கைகளை மீறியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்களை கொண்ட இரு ஒப்பந்ததாரர்களுக்கே பணிகள் தரப்பட்டுள்ளதாகவும் ஒரு டெண்டரில் தந்தையும் மகனும் பங்கேற்று பணியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து டெண்டர்களில் கணவன், மனைவி சமர்ப்பித்த ஒப்பந்தப் புள்ளிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது தணிக்கை அறிக்கை.
இதே போல் டாஸ்மாக் நிறுவனம் மது ஆலைகளுக்கு கொள்முதல் ஆணை வழங்குவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் சில ஆலைகள் அதிக பலனை அடைந்ததாகவும், மற்றவர்களுக்கு கொள்முதல் ஆணைகள் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கொள்முதல் மற்றும் சில்லரை விற்பனை கொள்கை மிகப்பழையது என்று கூறியுள்ள தணிக்கை அறிக்கை, கொள்முதலில் பாரபட்சம் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.