போக்குவரத்து தொழிலாளர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களின் வரவு, செலவு வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சென்னை மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குநர் எஸ்.நடராஜன், விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை, சரியான முடிவு எட்டப்படாததால் தோல்வியடைந்தது.
எனவே, அடுத்தகட்டமாக வரும் ஆகஸ்ட் 27ம் தேதி 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அந்த பேச்சுவார்த்தையின்போது பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டதாக கூட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெறவுள்ள ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை சுமூகமாக நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.