விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, காதல் திருமணம் செய்த இளைஞரை ஆணவப் படுகொலை செய்த பெண்ணின் சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் பாண்டி என்ற இளைஞர் சிவகாசியில் பணியாற்றி வந்தபோது, வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.
கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர்கள், அய்யம்பட்டியில் வசித்து வந்தனர். சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில், நந்தினி பணியாற்றி வந்தார்.
நேற்றிரவு நந்தினியை அழைத்து செல்வதற்காக வந்த கார்த்திக் பாண்டியை, 3 பேர் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர். தகவலறிந்து வந்த போலீஸார், கார்த்திக் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர், சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கார்த்திக் பாண்டியை கொலை செய்ததாக, நந்தினியின் சகோதரர்களான பாலமுருகன், தனபாலமுருகன் மற்றும் அவர்களது நண்பரான சிவா ஆகிய மூவரும் மல்லி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மூவரிடமும் திருத்தங்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.