பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுவதாகவும், எடப்பாடி பழனிசாமியால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது எனவும் தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்தவுடன் பயந்தது அதிமுகதான் என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டவர்களும் அதிமுகவினர்தான் என்றும்,
அண்ணாமலையை குறை சொல்லி பேசுவதும், விமர்சிப்பது அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பொழுதுபோக்கு எனவும் கரு.நாகராஜன் சாடியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினர் டெபாசிட் இழந்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிமுக நான்காக சிதறியுள்ள நிலையில், தலைவர்கள் இல்லாமல் தொண்டர்கள் பரிதவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஏற்று கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை எனவும், அண்ணாமலை குறித்து தொடர்ந்து வசைபாடி வருவதன் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் இயலாமையை வெளிப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 4வது இடத்தை பிடிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்,
அதிமுகவின் ஊழல் வழக்குகளை மக்கள் மன்றத்தில் அடுக்குவோம் என கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது பிரதமர் மோடியை, எடப்பாடி பழனிசாமி புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டியுள்ள அவர்,தற்போது சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முடிவு செய்துவிட்ட அதிமுக, மக்கள் மன்றத்தில் இருந்து தூக்கி எறியப்படுவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் உண்மையான நோக்கம், லட்சியங்களை செயல்படுத்தக் கூடிய இயக்கம் பாஜகதான் என்று அதிமுக தொண்டர்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள் என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் கனவு இனிமேல் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்க கூடாது எனக்கூறியுள்ள கரு.நாகராஜன்,அண்ணாமலையை விமர்சிப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறோம், மக்கள் மன்றத்தில் சந்திக்கிறோம் என்றும் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.