நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூரில் பாஜக வேட்பாளரான பிரபல நடிகர் சுரேஷ் கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து வெற்றிக்கொடி நாட்டியதுடன் மத்திய அமைச்சராகவும் வலம் வருகிறார். கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்படும் கேரளாவில் காலடி பதித்ததன் மூலம் பாஜக அங்கு வேகமாக முன்னேறி வருகிறது. இது சாத்தியமானது எப்படி? என்பது பற்றி பார்க்கலாம்.
திருச்சூர் மக்களவைத் தொகுதி, குருவாயூர், மணலூர், ஒல்லூர், திருச்சூர், நாட்டிகை, இரிஞ்சாலக்குடா மற்றும் புதுக்காடு ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.
2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 58.42 சதவீத இந்துக்கள் வாழும் திருச்சூர் மாவட்டத்தில் 24.27 சதவீத கிறிஸ்தவர்களும்,17.07 சதவீத இஸ்லாமியர்களும் உள்ளனர்.
இத்தொகுதியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஆனால், 1996-ம் ஆண்டிலிருந்து, திருச்சூர் லோக்சபா தொகுதியில் பாஜக வாக்கு சதவீதத்தைப் படிப்படியாக அதிகரித்திருக்கிறது.
1996ம் ஆண்டு 5.8 சதவீத வாக்குகள் பெற்ற பாஜக, 2009ம் ஆண்டு 6.7 சதவீத வாக்குகள் பெற்றது. 2014 ஆம் ஆண்டு 11.15 சதவீதம் பெற்ற பாஜக, 2019 ஆம் ஆண்டு 17.05 சதவீதம் அதிகரித்து, 28.02 சதவீத வாக்குகளைப் பெற்றது.
தனக்கு திருச்சூர் வேண்டுமென்று பிரச்சாரம் செய்த சுரேஷ் கோபியை, இந்த முறை,திருச்சூர் மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் வாக்குகளைப் பெற, லூர்து பெருநகர பேராலயத்திற்கு ஒரு கிரீடம் பரிசாக வழங்கியது ஒருபுறம் என்றாலும் இந்த வெற்றிக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு மிக முக்கியமானதாகும்.
கிறிஸ்துவ ஆயர்களுடனான தொடர்பை மேம்படுத்தியதோடு, கிறிஸ்துவர்களும் இந்து பாரம்பரியம் கொண்டவர்களே என்பதை கிறிஸ்துவ மக்களுக்கு நினைவூட்டியது ஆர்.எஸ்.எஸ்.
மேலும், கிறிஸ்துவர்களையும் ஷாகாக்களில் கலந்து கொள்ள வைத்ததும், ஒவ்வொரு தேவாலயத்துக்குமான திருவிழாக்களைப் பயன்படுத்தி, சிறுபான்மைக் குழுக்களை உருவாக்கியதும், குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பாஜகவுக்குப் பெற்று தந்தது.
இந்து பண்டிகைகளின் போது ஜாதியைப் பார்க்காமல் அனைத்து மக்களும் பங்குபெறும் வகையில் ஊர்வலம் நடத்தியது, 100க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளை நிறுவி மக்கள் சேவை செய்தது, கிறிஸ்தவர்களிடையே ஆர்எஸ்எஸ் கிளைகளை விரிவுபடுத்தியது, கடலோர மீனவச் சமூகத்தினரிடையே சமூக அடிப்படையிலான குழுக்களை உருவாக்கியது, கூடவே அரசு நிர்வாகத்தில் இருக்கும் மூத்த IAS, IPS அதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்தெடுத்தது என்று முறையான களப் பணிகளில் இடைவிடாது செயல்பட்டது ஆர்.எஸ்.எஸ். இதனால் முக்குவா மீனவ சமூகம், இந்த முறை பாஜகவுக்கு ஆதரவாக மாறியது.
திருச்சூரில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு பஞ்சாயத்திலும், ஒவ்வொரு பூத்துக்கும் நிர்வாகக் குழுக்களை அமைத்து தீவிர மக்கள் பணியாற்றி மக்கள் மனதைப் பாஜக கவர்ந்தது.
இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் குருவாயூர் பகுதியில் மட்டுமில்லாமல், மங்களூர், நாட்டிகா போன்ற பகுதிகளில் பாஜக கணிசமான வளர்ச்சி கண்டுள்ளது. சாதிய வாதம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக சமத்துவம் என்ற புதிய பிரச்சாரத்தை பாஜக முன்னெடுத்து வைத்தது.
இராமாயண உற்சவம் மற்றும் சபரி விழா போன்ற திருவிழாக்கள் மூலம் இந்து ஒற்றுமை உணர்வைப் பாஜக உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
நாள்தோறும் அரசியல் வன்முறைகள் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்திருப்பதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் வலுவான பதிலடி கொடுக்கத் தொடங்கியதன் விளைவாக பாஜக கேரளாவில் ஒரு தொகுதியை வென்றிருக்கிறது. இதன் மூலம் கடலோர மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களில் ஹிந்து மக்களிடையே சாதி வேற்றுமையை மறந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வரும் பகுதிகளில் வேகமாக பாஜக தடம் பதித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
பரசுராமர் அவதரித்த மாநிலமான கேரளாவின் சிவப்பு அரசியல் நிலப்பரப்பில், பரசுராமரைப் போலவே ஒற்றை கோடாரியாக திருச்சூரில் பாஜக மலர்ந்திருக்கிறது.