புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக சுற்றுலா தின விழாவில் தொடக்க நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, உலக நாடுகளில் உள்ள அனைத்து உணவுகளும் கிடைக்கின்ற மாநிலமாக புதுச்சேரி திகழ்வதாக தெரிவித்தார். ஆன்மிகம் மற்றும் அமைதி நிறைந்த மாநிலமாக புதுச்சேரி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
தீபாவளி பண்டிகைக்கு முன் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரங்கசாமி கூறினார்.