துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை என்றும் துணை முதலமைச்சரை நியமிப்பதில் மட்டும் தமிழக அரசு அவசரம் காட்டுவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்கிளிடம் பேசிய அவர் கூறியதாவது : மது ஒழிப்பு மாநாடு இன்று மகளிர் மாநாடாக மாற்றப்பட்டுள்ளது. திருமாவளவன் காந்தியை தவிர்த்து விட்டு காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
தமிழக அரசு முற்றிலும் தோல்வி அடைந்து இருக்கிறது .36 மருத்துவ கல்லூரியில் 16 டீன்கள் இல்லை. பல துறைகளில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது.
படிப்பதற்கு ஒரு கொள்கை கொண்டு வந்தால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். குடிப்பதற்காக ஒரு கொள்கை இருந்தால் ஒத்துக்கொள்வார்கள்.
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள். உயர்நீதிமன்ற சென்று அனுமதி வாங்க வேண்டிய சூழல் உள்ளது.
2026 இல் தமிழகத்தில் ஒரு மாற்றம் உண்டாகும். பாஜகவிற்கு மாற்றம் இருக்கும்; திமுகவிற்கு ஏமாற்றம் இருக்கும் என தமிழிசை தெரிவித்துள்ளார்.