சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு 65 % நிதி மத்திய அரசு சார்பாக வழங்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை மாதவரம் முதல் சிப்காட் வரையும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையும் 2-ஆம் கட்ட மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதையொட்டி, 63 ஆயிரத்து 246 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.
இதில் 65 சதவீத நிதி மத்திய அரசின் தொகுப்பிலிருந்து விடுவிக்கப்படும் என நிதியமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில அண்ணாமலை விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் மக்கள் விரோத சக்திகளால் பரப்பப்பட்ட தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சென்னை மெட்ரோவின் 2-ம் கட்டத்திற்கான நிதியுதவி முறையை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்த பிறகு, மத்திய அரசு தற்போது 65% நிதியை அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் நியாயமான பங்கைப் பெறுவதை உறுதிசெய்வதில் பிரதமரின் அர்ப்பணிப்பு மற்றும் மாநிலத்தின் பொருளாதாரச் செழுமையை உயர்த்தியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.