சென்னையில், வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை அளித்துள்ள புகாரில், வான் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் பேர் கூடுவார்கள் என தெரிந்திருந்தும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்யவில்லை எனவும், 5 பேர் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 13 லட்சம் பேர் கூடிய நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும், தற்போது தமிழக அரசின் தவறான நிர்வாகத்தால் அப்பாவி மக்கள் நீண்ட நேரம் சிரமத்திற்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு, 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி கடந்த 6 -ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.