சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதற்காக, அங்கு செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை ரேஸ் கிளப்பில், 147 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கோல்ஃப் மைதானத்தை மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நிர்வகித்து வருகிறது.
ரேஸ் கிளப்புக்கான குத்தகை உரிமை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள கோல்ஃப் மைதானத்தில் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், கோல்ஃப் மைதானத்துக்கு செல்லும் நுழைவாயிலை சீல் வைக்கும் முன் தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த அவகாசம் வழங்கப்படவில்லை எனவும், மேலும் தமிழக அரசு நீர்நிலை அமைப்பதற்காக அப்பகுதியில் குழி தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான ஜிம்கானா கிளப் தரப்பு வழக்கறிஞர் கோல்ஃப் மைதானத்தில், 90 மீட்டர் அகலத்திற்கு 10 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதாகவும், அதனால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளதால் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு நிலம் சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள சூழலில், அந்த நிலத்தில் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வழக்கு தொடர்வதற்கு ஜிம்கானா கிளப்புக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழக அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மேலும் ஜிம்கானா கிளப்பின் மனுவுக்கு அக்டோபர் 24ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.