அறுவடைக் கருவிகளில் மிகப்பழமையான கருவி என்றால் அது அரிவாள் தான். தற்போது நலிவடைந்து வரும் அந்த அரிவாள் தயாரிப்பு தொழிலை காக்க வேண்டுமென்பதே பலரது கோரிக்கையாக உள்ளது. அது பற்றிய ஒரு சிறப்பு செய்தி தொகுப்பு..!
மனித வரலாற்றில் உலோகங்களின் வருகைக்கு முன்பு வரை கல் கருவிகளே பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு மனித நாகரீக வளர்ச்சியின் முதல் படியாக உலோகங்கள் உருவாக்கப்பட்ட பிறகு இரும்பினாலான கருவிகளே இன்று வரை பயன்பாட்டில் உள்ளது. அந்த வகையில் அறுவடைக் கருவிகளில் மிகவும் பழமையான ஒன்று, என்றால் அது அரிவாள் தான். உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அரிவாள்கள் தோட்டக்கலை கருவிகளில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. இன்றைய நவீன காலக்கட்டத்தில் கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களில் உள்ள வீடுகளில் கூட அரிவாள்கள் பயன்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. விவசாயம் முதல் இறை வழிபாடு வரை முக்கிய இடத்தில் உள்ள இந்த அரிவாள்களை சில குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக இன்றளவும் தயாரித்து வருகின்றன.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தென்கரை என்ற சிறு கிராமத்தில் 100 வருடங்களுக்கும் மேலாக, தங்களது குடும்பத் தொழிலாக 20 தொழிலாளர்கள் அரிவாள்களை தயாரித்து வருகின்றனர். இந்த ஊரில் ஒரு அடி முதல் 18 அடி வரையிலான அரிவாள்கள் தயாரிக்கப்படுகின்றன. விறகு வெட்ட பயன்படக்கூடிய அரிவாள்கள், இளநீர் வெட்டும் அரிவாள்கள், விவசாய பணிகளுக்கான அரிவாள்கள், வாங்கு அரிவாள்கள், சாமிக்கு நேர்த்திக்கடன் அரிவாள்கள், கருக்கரிவாள்கள், சூலாயுதம், உள்ளிட்ட ஆயுதங்கள் இந்த கிராமத்தில் பாரம்பரியமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், ஓலைக்குடிப்பட்டி, மருதிப்பட்டி, அரண்மனை சிறுவயல், முப்பையூர் என சுற்றுவட்டார பகுதிகளில் அரிவாள்கள் தயாரிக்கும் தொழில்கள் நடைபெற்று வந்தாலும், தென்கரையில் தயார் செய்யப்படும் அரிவாள்கள் தரம் குறையாமல் உழைக்கக் கூடியதாக இருப்பதாக தெரிவிக்கும் வாடிக்கையாளர்கள், விவசாய வேலைக்கு இங்கு வாங்கும் அரிவாள்களே தரமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
தென்கரையில் தயார் செய்யப்படும் அரிவாள்கள் 15 வருடங்கள் வரை உழைக்கக்கூடியது என்றும், கனரக வாகனங்களுக்கு அடியில் பொருத்தப்படக்கூடிய உருக்கு பட்டைகளை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர் அரிவாள் தயாரிக்கும் உற்பத்தியாளர்கள்.
மூலதனப் பொருட்களின் விலையேற்றத்தால் தற்போது தொழில் மிகவும் மந்த கதியில் நடைபெறுவதாக வேதனை தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள், உடல் உழைப்பை மிகவும் அதிகமாக கொடுக்கக்கூடிய கடினமான தொழிலாக இருப்பதால் வேலை ஆட்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டு, தொழில் நலிவடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
அறுவடை கருவிகளில் மிகவும் பழமையான அரிவாள்களை காக்க வேண்டுமென்றால் அந்த தொழில் செய்யும் உற்பத்தியாளர்களுக்கு அரசு உதவிகள் செய்ய வேண்டுமென்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.