திருப்பூர் மாவட்டம், அவினாசி சாலையில் பேருந்தின் கண்ணாடி உடைந்து காயம் ஏற்பட்ட நிலையிலும் பேருந்தை பாதுகாப்பாக இயக்கி பயணிகளை காப்பற்றிய ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் பேருந்தை சுரேந்திரன் என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். 60 பயணிகளுடன் பேருந்து அவினாசி சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியது.
இதில் எதிர்பாரதவிதமாக பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சிதறியது. இதில் ஓட்டுநர் சுரேந்திரன் ரத்த காயமடைந்த நிலையில் பதற்றம் அடையாமல் பேருந்தை சீரான வேகத்தில் இயக்கி அனைத்து பயணிகளையும் காப்பாற்றினார்.
ஓட்டுநருக்கு பாராட்டுகளை தெரிவித்த பயணிகள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதற்கிடையே ஓட்டுநர் மீது பேருந்தின் கண்ணாடி உடைந்து விழும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.