தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 10 ஆண்டுகளாக பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 12 ஆயிரம் பணியிடங்களில் 7 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் பேராசிரியர்கள் இல்லாமலேயே சில கல்லூரிகள் செயல்படுவதும், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பெரும்பாலான கல்லூரிகள் இயங்குவதும் தெரியவந்துள்ளது.
இதனால் பெரும்பாலான கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பேராசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகளை நடத்த முடியாத சூழலில், உடற்கல்வி பயிற்சியாளர்களும் இல்லாத சூழல் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 60 அரசு உதவி பெறும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படாததால் 41 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
உயர்கல்வி சேர்க்கை விகிதம் மேம்பட்டிருப்பினும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பேராசிரியர்களை நியமிப்பதன் மூலம் நிதிச்சுமை ஏற்படும் என்று அரசு கருதினால் ஆண்டுக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பேராசிரியர்களை நியமிக்கலாம் என்று, கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.