தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டிய வீடியோவை யூ-டியூபில் பதிவேற்றியது தொடர்பாக யூ-டியூபர் இர்ஃபானிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை 24-ம் தேதி, பிரபல யூ-டியூபரான இர்ஃபானுக்கு குழந்தை பிறந்தது. அப்போது இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டியதை வீடியோ எடுத்து யூ-டியூபில் பதிவேற்றினார்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் யூ-டியூபில் அகற்றப்பட்ட வீடியோவை அகற்றக்கோரி யூ-டியூப் நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. மேலும், யூ-டியூபர் இர்ஃபான் மற்றும் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் விசாரணை நடத்த மண்டல சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில் நேற்று சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி சுகாதாரத்துறை இணை இயக்குநர் இளங்கோவன் காவல்துறையிடம் புகார் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக யூ-டியூபர் இர்ஃபானிடம் செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தனது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய இர்ஃபான் என்பது குறிப்பிடத்தக்கது.