இந்திய வம்சாவளியை சேர்ந்த சுவிஸ்நாட்டு கோடீஸ்வரரின் மகளான வசுந்தரா ஓஸ்வால் உகாண்டாவில் சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யார் இந்த வசுந்தரா ஓஸ்வால் ? எதற்காக உகாண்டாவில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சுவிஸ் நாட்டு தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால், இந்திய தொழிலதிபர் அபய் குமார் ஓஸ்வாலின் மகனாவார். பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவரது மனைவி ராதிகா ஓஸ்வால் ஆகியோரின் 26 வயது மகள் வசுந்தரா ஓஸ்வால்.
ஓஸ்வால் அக்ரோ மில்ஸ் மற்றும் ஓஸ்வால் கிரீன்டெக் நிறுவனரான பங்கஜ் ஓஸ்வால், குளோபல் பெட்ரோ கெமிக்கல்ஸ், ரியல் எஸ்டேட், உரங்கள் மற்றும் சுரங்கத் தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
கிழக்கு ஆப்பிரிக்காவின் எத்தனால் உற்பத்தி ஆலையின் தலைவராக இருக்கும் 26 வயதான வசுந்தரா ஓஸ்வால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவிஸ் தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வாலின் மகளாவார். ஓஸ்வால் குழுமத்தின் உலகளாவிய விரிவாக்கத்தில், வசுந்தரா ஓஸ்வாலின் பங்கு முக்கியமானது.
குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்காவில் ஓஸ்வால் குழுமத்தின் வணிக சாதனைகளுக்காக கடந்த ஆண்டுக்கான குளோபல் யூத் ஐகான் விருது வசுந்தரா ஓஸ்வாலுக்கு வழங்கப் பட்டது.
தனது இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பின்போது, வசுந்தரா ஓஸ்வால், PRO இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியதோடு, தற்போது அதன் நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.
உகாண்டாவில் ஓஸ்வால் குழுமத்தின் மது ஆலையில் இருந்து ஆயுதம் ஏந்திய 20 மர்ம நபர்களால் வசுந்தரா ஓஸ்வால் கடத்தப்பட்டதாகவும், கொலைக் குற்றச்சாட்டின் கீழ் 20 நாட்களுக்கும் மேலாக சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வசுந்தரா ஓஸ்வால் மீதான குற்றச்சாட்டுகளை ஓஸ்வால் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவிஸ் தொழிலதிபர் பங்கஜ் ஓஸ்வால், தனது மகள் வசுந்தரா ஓஸ்வால் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் உகாண்டாவில் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டதாக ஐநா சபையில் மேல்முறையீடு செய்திருக்கிறார்.
முன்னதாக, உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனிக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், தங்கள் குடும்பத்திடம் இருந்து 200,000 அமெரிக்க டாலரை கடனாக பெற்றதாகவும் வசுந்தரா மீது அந்த ஊழியர் பொய் குற்றச்சாட்டுக்களைக் கூறியிருப்பதாகவும், பங்கஜ் ஓஸ்வால் தெரிவித்துள்ளார். வசுந்தராவால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நபர் தான்சானியாவில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தான், வசுந்தரா இக்கட்டான சூழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், குளிக்காமல், உடை மாற்றாமல், ஷூக்கள் நிறைந்த அறையில் தங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், அதிகாரிகளால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், வசுந்தரா ஓஸ்வாலின் இன்ஸ்டா பக்கத்தில் அவரது சகோதரி ரிடி ஓஸ்வால் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், கொலை போன்ற கொடூரமான குற்றங்களில் குற்றவாளிகளுக்கான சிறையில் இரண்டரை வாரங்களுக்கும் மேலாக உகாண்டாவில் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும்,. எந்த ஆதாரமும் இல்லாமல், காவலில் வைக்க எந்த சரியான காரணமும் இல்லாமல் வசுந்தரா ஓஸ்வால் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
உகாண்டாவில், 90 மணிநேரம் காவலில் வசுந்தரா ஓஸ்வால் இருந்தபோது எடுக்கப்பட்டதாக ரிடி ஓஸ்வால் ஒரு ஆடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார்.
நிறுவனத்தின் வழக்கறிஞர் ரீட்டா நகாபிரே உட்பட பல ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவலில் வைக்கப்பட்ட பிறகு வசுந்தரா ஓஸ்வால் அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொள்ளவும் அனுமதி மறுக்கப் பட்டதாக அவரது சகோதரி இன்ஸ்ட்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நா. சபை விரைவில் நல்ல தீர்ப்பை வழங்க பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். உகாண்டாவில் தொழில் போட்டி காரணமாக, தமது சகோதரி சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ரிடி ஓஸ்வால் கூறியுள்ளார்.