தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கொடுங்கையூரில் வீட்டில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் தயாரித்ததாக கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மையமாக மட்டுமன்றி, உற்பத்தி செய்யும் அளவிற்கு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை வளர்த்து விட்டுள்ளதாக, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர்
போதைப்பொருள் புழக்கம் கட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் மாய உலகத்தில் இருந்து வெளிவந்து, போதைப்பொருளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இளைஞர்கள் போதைப்பொருள் தயாரிப்பு போன்ற தீய செயல்களில் ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளில் தங்கள் அறிவை செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.