திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினர் இன்று அறப்போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத தலைவர் வன்னியராஜன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் பாஜகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரையும் போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்ற மலையை காப்போம் என்ற அறவழிப் போராட்டத்தை இந்து முன்னணி அறிவித்திருந்தது. ஆனால், காவல்துறையினர் அனுமதி மறுத்து நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கேரளாவில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு செல்ல ரயில் மூலம் வந்த ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் வன்னியராஜனை விருதுநகர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அறப்போராட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்க இருந்த நிலையில், திருப்பூரில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.