திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாகவும் இது ஸ்டாலின் மாடல் ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம் எனவும் கூறியுள்ளார்.
பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவிற்கு ஸ்டாலின் மாடல் ஆட்சி நடந்து வருகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து கவலையில்லாத ஸ்டாலின், பெண்களுக்கு பாதுகாப்பு என வாய்சவடால் மட்டும் பேசினால் போதுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால் தினந்தோறும் இதுபோன்ற கொடூரங்கள் நிகழ்வதாக கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இனியாவது ஸ்டாலின் மாடல் அரசு விழித்து கொண்டு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.