மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது.
சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து Puthiyakalvi.in என்னும் இணையதளத்தை, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். அதேபோல் சமகல்வி எங்கள் உரிமை என்ற பாடலை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும், கையெழுத்து இயக்கத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மும்மொழி விவகாரத்தில் முதலமைச்சர் மக்களை தவறான வழியில் கொண்டு செல்வது வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டி கையெழுத்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திக்ககான பள்ளியை தமிழகத்தில் தொடங்கி வைத்தது ஈவெரா தான் என தெரிவித்தார்.
அதேபோல் மொழியை வைத்து ஆட்சிக்கு வந்த திமுக, அதே மொழியால் ஆட்சியை இழக்கப் போவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து சமகல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்தின் முதல் கையெழுத்தை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சமகல்வி எங்கள் உரிமை என எழுதி தொடங்கி வைத்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “தமிழ் வாழ்க, பாரதம் வாழ்க” என எழுதி தனது கையெழுத்தை பதிவு செய்தார். தொடர்ந்து பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது கையெழுத்தை பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தமிழக பாஜக சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, http://puthiyakalvi.in என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.