நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகள் மற்றும் மின் மாற்றிகளை சரிசெய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 25ஆம் தேதி முதல் இடைவிடாத காற்றுடன், கனமழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 70-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பல இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் கொட்டும் மழையையும், குளிரையும் பொருட்படுத்தாமல் மின் கம்பிகள் மற்றும் மின் மாற்றிகளை சரிசெய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே உதகையில் வீசிய பலத்த காற்று காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின்கம்பம் மீது மரம் சாய்ந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தேனோடு கம்பை செல்லும் சாலையில் நியூ ஹேரா பகுதியில் மரம் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.