ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும்போது அதிக சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பிருந்தும் இந்தியா நிதானத்தை கடைபிடித்தது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தொடக்க விழா நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உறுதியாக இந்தியா வசமாகும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மேக் இன் இந்தியா திட்டம் என்பது தேசிய பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கம் எனவும், இந்த திட்டம் இல்லையென்றால் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய படைகளால் பயனுள்ள நடவடிக்கையை எடுக்க முடியாது எனவும் தெரிவித்தார். இனிமேல் பாகிஸ்தானுடன் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை இருக்கும் எனவும் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்தார்.
புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிரிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்திற்கு திரும்புவார்கள் என்றும், அங்கு உள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடனான தொடர்பை விரும்புகின்றனர் என்றும் தெரிவித்தார்.
நான் இந்தியன், இந்தியாவுக்கு திரும்ப வந்து விட்டேன் என அவர்கள் அறிவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் ராஜ்நாத்சிங் கூறினார்.