ஆர்.கே.பேட்டை பகுதியில் 5 நாட்களுக்கு முன்பு தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலையைப் பெயர்த்து குழந்தைகள் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்குப் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் 2 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் சாலை போடப்பட்டது.
தார் சாலை ஒப்பந்தத்தை எடுத்த கண்ணாயிரம் என்பவர் 15 நாட்கள் மேற்கொள்ள வேண்டிய தார் சாலைப் பணியை 5 நாட்களில் முடித்ததாகக் கூறப்படுகிறது. தார் சாலை போடும்போது அரசு அதிகாரிகள் யாரும் நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை எனவும் தெரிகிறது.
இந்நிலையில், அம்மனேரி, கொண்டாபுரம், வெள்ளாத்தூர் ஆகிய கிராமத்தில் 3 கிலோ மீட்டருக்கு போடப்பட்ட தார் சாலை பெயர்ந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
5 நாட்களுக்கு முன்பு தரமற்ற முறையில் போடப்பட்ட தார் சாலையைக் குழந்தைகள் கையால் பெயர்த்து விளையாடி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாலை அமைக்க மத்திய அரசு வழங்கிய நிதியில் ஊழல் புரிந்துள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.