நான்கு ஆண்டுகளாகவே பந்தல்குடி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை பந்தல்குடி கால்வாய், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு, துணி கட்டி மறைக்கப்பட்டிருந்த செய்தி வெளியாகி, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், நள்ளிரவில் கால்வாயைப் பார்வையிடுவதைப் போல் ஒரு நாடகம் நடத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த ஆண்டு, மதுரையில் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதற்கு, பந்தல்குடி கால்வாயை தூர்வாராமல் இருப்பதும் ஒரு காரணம்.
இதனையடுத்து, ₹90 கோடி செலவில், கால்வாயை தூர் வாரி, தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். ஆனால், இன்று வரை அதற்கும் எந்த நடவடிக்கைகளும் இல்லை.
நான்கு ஆண்டுகள் கால்வாயை தூர்வார ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் உறங்கிக் கொண்டிருந்த முதலமைச்சர், நள்ளிரவில் சென்று பார்வை இடும் நாடகம் யாரை ஏமாற்ற? இந்த நாடகத்தால் யாருக்கு என்ன பயன்?
மதுரை மக்களை என்ன முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? கால்வாயை தூர்வார, அமைச்சர் கே.என்.நேரு அறிவித்த ₹90 கோடி திட்டம் என்ன ஆனது? எத்தனை முறைதான் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவீர்கள்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.