மின் தடை காரணமாக நீட் தேர்வில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் மறு தேர்வு நடத்த முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வின் போது, மின்சாரம் இல்லாததால், சரியாகத் தேர்வை எழுத முடியவில்லை எனக் கூறி 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜென்ரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன் ஆஜராகி, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டார்.
மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில், தேர்வு மையத்தில் வெளிச்சம் இருந்தது என்பதை நிரூபிக்கக் கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுக்கள் மீதான தீர்ப்பை ஜூன் 6-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.