திருமணமான பெண் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு எதிராகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
4 வயதுக் குழந்தையின் தாயான இவருக்கு அண்டை வீட்டில் வசித்த ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் ஒரு ஆண்டு தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஆண் நண்பர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மனுதாரரான பெண்ணிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியது.
அதில், இருவரும் விருப்பப்பட்டு ஒன்றாக வசித்து வந்த நிலையில் பாலியல் வன்கொடுமை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல எனவும் ஏற்கனவே வேறொருவருடன் திருமணமாகி குழந்தை பெற்றிருக்கும் பெண், பாலியல் வன்கொடுமை செய்த நபருடன் ஒரு ஆண்டாக எப்படி ஒன்றாக வசித்தீர்கள் எனவும் கேள்வி எழுப்பியது.
பின்னர் ஆண் நண்பருக்கு எதிராகப் பெண் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கைத் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.