ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்ராவில் 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஜம்மு-காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, உலகின் மிக உயரமான செனாப் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கத்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதையடுத்து, விழாவில் சிறப்புரையாற்றிய அவர், உதம்பூர் – பாரமுல்லா இடையே தொடங்கப்பட்டுள்ள ரயில் சேவையானது, ஜம்மு-காஷ்மீருக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும் எனத் தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் ஜம்முவுக்கு இத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பது கட்சிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் எனக்கூறிய அவர், சவாலான பணிகளைத் தேர்ந்தெடுத்து அதனைச் செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.