முதலமைச்சர் ஸ்டலினின் தொகுதி மறுவரையறை பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி உட்பட ‘இன்டி’ கூட்டணி தலைவர்கள் கூட நம்பவில்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2027-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது முதலே, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில் இல்லாத பூதத்தை உருவாக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டிற்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க, பாஜக சதி செய்வதாக ஸ்டாலின் மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்லி வருவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
2001-ல் தொகுதி மறுசீரமைப்பு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. மக்கள் தொகை வெகுவாக வளர்ந்துவிட்டது. ஆகவே, கண்டிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஆகவே, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நிலைப்பாடு.
தொகுதி மறுவரையறை எப்போது நடைபெறப் போகிறது, எந்த அடிப்படையில் நடைபெறப் போகிறது என்று எதுவும் அறிவிக்கப்படவில்லை, ஆனால், அதற்கு முன்பாகவே தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மாய தோற்றத்தை உருவாக்கி வளர்த்தெடுக்க முயல்கிறார்.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பால் அவை பாதிக்கப்படக்கூடாது என்பதால், விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் நடைபெறும் என்று மத்திய அரசு தெளிவாக தெரிவித்து விட்டது. தொகுதி மறுவரையறை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார்.
விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்றும், தென்னிந்திய மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டில் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்றும் உறுதியளித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த போதும் தெளிவுபடுத்தினார். ஆனால் மு.க.ஸ்டாலின் அவர்கள், தவறான தகவல்களை தெரிவித்து மக்களை திசை திருப்பும் அரசியலை தொடர்ந்து செய்து வருகிறார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களையும் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் துணைக்கு அழைத்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொகுதி மறுவரையறை பற்றி பேசவில்லை.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநில முதல்வர்களின் கூட்டம் என்று அறிவித்து, பிசுபிசுத்த கூட்டம் நடத்திய திமுக, இதற்காக டெல்லியில் இன்டி’ கூட்டணி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை. டெல்லியில் ‘இன்டி’ கூட்டணி கூட்டத்தை கூட்டி, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டை ராகுல் காந்தியை வைத்து அறிவிக்க வேண்டியது தானே.
முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் இதை செய்ய முடியாது. ஏனெனில் ‘இன்டி’ கூட்டணி தலைவர்களே திமுகவின் கட்டுக்கதையை நம்புவதற்கு தயாரில்லை. இது தெரிந்து தான் அறிக்கை மேல் அறிக்கை விட்டு பல்லவி பாடிக்கொண்டு இருக்கிறார் முதலமைச்சர்.
அவரிடம் நான் கேட்கும் கேள்விகள் இது தான், 2027-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு எப்படி பிரதிநிதித்துவம் குறையும்?
தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோதே தெளிவுபடுத்திய பிறகும் தொடர்ந்து பொய்யுரைப்பது ஏன்? அறிவிக்காத ஒன்றை வைத்து விஷமப் பிரசாரத்தை திமுக செய்வது ஏன்? தொகுதி மறுவரையறை விஷயத்தில் திமுகவை, ராகுல் காந்தி, அகிலேஷ், யாதவ், செல்வி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ‘இன்டி’ கூட்டணி தலைவர்கள் யாரும் ஆதரிக்கவில்லையே ஏன்?
முதலமைச்சரின் தொகுதி மறுவரையறை பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி உட்பட ‘இன்டி’ கூட்டணி தலைவர்கள் கூட நம்பவில்லை. தமிழக மக்கள் எப்படி நம்புவார்கள். தொகுதி மறுவரையறை குறித்து தமிழக முதலமைச்சர் திரு. மு. சு. ஸ்டாலினின் மடை மாற்றும் அரசியல் தோலுரிக்கப்பட்டு விட்டது.
2027ம் ஆண்டு நடத்தப்படவுள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா?
தொகுதி மறுவரையறை பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பே பூச்சாண்டி கிளப்புவதை விட்டு விட்டு நான் ஏற்கனவே கூறியபடி, நிர்வாக சீர்குலைவில் இருந்து தமிழக அரசை காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கூஸ்டாலினை மீண்டும் எல். முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.