மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுக்கால சாதனைகளை வீடியோவாக வெளியிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக அரசின் ஒவ்வொரு திட்டமும் ஏழை மக்களின் நலனை உறுதி செய்வதில் கவனம் செலுத்தியதாகக் கூறியுள்ளார்.
உஜ்வாலா, ஆயுஷ்மான் பாரத், கிசான் சம்மன் நிதி ஆகிய திட்டங்கள் நாட்டு மக்களின் நம்பிக்கைகளுக்கு புதிய சிறகுகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக ஆட்சியில் பாரதம் வளர்ச்சியையும், பொருளாதார மாற்றங்களைக் கண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் உலகின் முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாகப் பாரதம் உள்ளதாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் பாரதம் உறுதியுடன் உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள பதிவில், 2014ல் பிரதமர் மோடி பதவியேற்றபோது பொருளாதாரம் சீர்குலைந்திருந்தும், நிர்வாக அமைப்பு திசையற்றும் இருந்ததாக விமர்சித்தார். ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி தலைமையிலான 11 ஆண்டுக்கால பாஜக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
12வது ஆண்டு தொடக்கத்திலும் தன்னம்பிக்கை, வலிமை மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தின் எதிர்காலத்தை நோக்கி பாரதம் உறுதியுடன் பயணிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.