மதுரையில் வரும் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகப் பெருமான் ஆலயங்களை சீரமைக்க வலியுறுத்தியும், நமது பண்பாட்டையும், ஹிந்து தர்மத்தையும் காத்திடவும், நமது கோவில்களை மீட்டிடவும், உலகெங்கிலும் உள்ள, குறிப்பாக தமிழகத்தில் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைத்து, மதுரையில் ‘குன்றம் காக்க, கோயிலை காக்க’ என்ற பெயரில், முருக பக்தர்கள் மாநாடு, ஹிந்து முன்னணி சார்பில் மாநிலத் தலைவர், காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில், வரும் ஜூன் 22 அன்று நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
திமுக உள்ளிட்ட கட்சிகள் போலி மதச்சார்பின்மை பேசி, ஹிந்து மதத்தைச் சார்ந்த மக்களையும், பக்தர்களையும், கோவில்களையும், தொடர்ந்து பாரபட்சமாக நடத்தி வருவதோடு, கோவில் சொத்துக்களை, கோவில்களுக்கும், பக்தர்களுக்கும் வேண்டிய அடிப்படை வசதிகள் கூடச் செய்து கொடுக்காமல் தொடர்ந்து வஞ்சித்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்த்து, பக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்திட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது ஆலயங்கள், முறையாகப் பராமரிக்கப்படுவதோடு, பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானம், கோவில்களின் மேம்பாட்டிற்கும், பராமரிப்பிற்கும் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, முருக பக்தர்கள் மாநாட்டினை முன்னெடுத்திருக்கும் ஹிந்து முன்னணி இயக்கத்திற்கு பாராட்டுக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பக்தர்கள் அனைவரும், வரும் ஜூன் 22 அன்று, மதுரையில் பெருவாரியாகக் கூடி, முருக பக்தர்கள் மாநாட்டினை, மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.