குஜராத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிலமணி நொடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த பயங்கர விமான விபத்துக்கான காரணம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த வியாழக் கிழமை, அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம், லண்டனுக்குக் கிளம்பியது.
கிளப்பிய வேகத்தில் அருகில் இருந்த மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
AI-171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து வானில் ஏறுகிறது. பிறகு குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலே தாழ்வாகப் பறந்த விமானம் சில நொடிகளிலேயே அதிவேகமாக கீழே இறங்குகிறது. மரங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்களுக்குப் பின் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போகிறது ஏர் இந்தியா விமானம். அதன்பின்னர்,அதிக சத்தத்துடன் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிகிறது. ஒரு பெரிய கருப்பு புகை மூட்டத்தை வீடியோக்கள் காட்டுகின்றன.
625 அடி உயரத்தை எட்டியபோது விமானத்திலிருந்து கடைசி சிக்னல் கிடைத்ததாகவும், பின்னர் நிமிடத்துக்கு 475 அடி செங்குத்து வேகத்தில் கீழே விழுந்து நொறுங்கியதாகவும் விமான ரேடார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைரலான வீடியோவில் விமானம் காற்றில் மிதக்கப் போராடுவதைக் காட்டுகிறது. இது விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் செயலிழந்து போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.
புறப்பட்ட உடனேயே அகமதாபாத் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு MAY DAY அபாய அழைப்பு வந்துள்ளது. அதன்பின்,ஏர் இந்தியா விமானத்திலிருந்து எந்த பதிலும் இல்லை என்று இந்திய விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வழக்கமாகப் பறவை மோதுவதும் விமானம் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கும். இரட்டை இயந்திர செயலிழப்புக்கான காரணம், பறவை மோதுவதுதான் என்றும் கூறப்படுகிறது.
விமானம் புறப்படும்போது அதன் இறக்கை மடிப்புகள் (Airplane wing flaps) ஒரு சிக்கலான நிலையில் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ள சில விமான நிபுணர்கள், மடிப்புகள் இறக்கையுடன் ஒன்றிப்போன நிலையிலிருந்துள்ளதை வீடியோவில் காணமுடிகிறது என்றும் விமானம் புறப்பட்ட உடனேயே இப்படி இருப்பது அரிதானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிரீம்லைனர் விமானம், ஆறு வாரங்களுக்கு முன்புதான் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்துள்ளது என்று கூறப்பட்டது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப் பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகு கறுப்புப் பெட்டியில் பதிவான தகவல்களைப் பெறக் குறைந்தது 15 நாட்கள் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்.