வர்த்தகம், நிதி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு என பல்வேறு துறைகளில், மத்திய தரைக்கடல் தீவு நாடான சைப்ரஸ், இந்தியாவுக்கு ஒரு முக்கியமான நாடு என்பது மீண்டும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. மத்தியதரைக்கடல் மற்றும் ஐரோப்பாவில் உறவுகளை இந்தியா மறுசீரமைத்துவரும் நிலையில்,பிரதமர் மோடியின் சைப்ரஸ் பயணம் மிக வியூக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக, இஸ்ரேல், ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் வான்வெளி மூடப்பட்டுள்ளது. கனடாவில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டுக்குச் செல்லும் வழியில், அரேபியக் கடல், சோமாலியா, எத்தியோப்பியா, எரித்திரியா மற்றும் எகிப்து வழியாக 8 மணிநேரத்துக்கும் மேலாகச் சுற்றி பயணம் செய்து, பிரதமர் மோடி, சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார். 1983-ல் இந்திரா காந்தி, மற்றும் 2002-அடல் பிகாரி வாஜ்பாஜ்க்கு பிறகு, 23 ஆண்டுகளுக்குப் பின் ஒரு இந்தியப் பிரதமர் சைப்ரஸ் நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
பயங்கரவாதத்துக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி நின்றது. மேலும், இந்தியா மீதான தாக்குதல்களில் துருக்கி வழங்கிய ட்ரோன்களைப் பாகிஸ்தான் பயன்படுத்தியது. சைப்ரஸ் நாடானது தெற்கில் துருக்கி, மேற்கில் சிரியா மற்றும் வடமேற்கில் இஸ்ரேலும் அமைந்துள்ள ஒரு மத்திய தரைக் கடல் தீவு ஆகும். துருக்கி மற்றும் கிரேக்க இன மக்கள் வசிக்கும் இந்த தீவில், நீண்ட காலமாகவே இனமோதல்கள் இருந்துவந்தது.
1974ஆம் ஆண்டில்,சைப்ரஸ் மீது படையெடுத்த துருக்கி ராணுவம்,அத்தீவின் புகழ்பெற்ற வரோஷா நகரைக் கைப்பற்றியது.மேலும், சுமார் 35 ஆயிரம் ராணுவ வீரர்களைத் துருக்கி நிறுத்தியுள்ளதால், கடந்த 51 ஆண்டுகளாக அந்நகரம் வெறிச்சோடி கிடக்கிறது.
சைப்ரஸின் 35 சதவீத நிலப்பரப்பைத் துருக்கி கட்டுப்படுத்துகிறது, ஆனால் உலகில் எந்த நாடும் அந்தப் பகுதியை அங்கீகரிக்கவில்லை; கிரேக்க சைப்ரஸ் குடியரசை ஐநா சபை, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளும் அங்கீகரித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர துருக்கி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது, ஆனால் சைப்ரஸ் அதைத் தீவிரமாகத் தடுத்து வருகிறது. துருக்கியின் ராணுவப் படைகள் சைப்ரஸில் இருந்து விலக்கிக் கொள்ளப்படவேண்டும் என்பது உள்ளிட்ட சைப்ரஸ் குறித்த ஐநா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களைத் துருக்கி பின்பற்றும்படி இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மேலும், சைப்ரஸில் ஐநா அமைதி காக்கும் படைக்கு லெப்டினன்ட் ஜெனரல் PS கியானி, மேஜர் ஜெனரல் திவான் பிரேம் சந்த் மற்றும் ஜெனரல் KS திம்மையா ஆகிய மூன்று இந்திய இராணுவ அதிகாரிகள் படைத் தளபதிகளாகப் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்,பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீர் விவகாரம், ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் என பல்வேறு முக்கிய விவகாரங்களில் சைப்ரஸ் மற்றும் கிரீஸ் ஆகிய இரண்டு நாடுகளும், இந்திய ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றன.
அணுசக்தி வினியோகஸ்தர்கள் குழு மற்றும் சர்வதேச அணுசக்தி நிறுவனம் போன்ற உலகளாவிய ஒழுங்குமுறை நிறுவனங்களுக்குள் இந்தியா-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை சைப்ரஸ் ஆதரித்துள்ளது. இந்தியா, கிரீஸ், சைப்ரஸ் (IGC) வணிகம் மற்றும் முதலீட்டு கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்து, தளவாடங்கள், விமான போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் சேவைகளில் முத்தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்த கவுன்சிலின் நோக்கமாகும்.
ஏற்கெனவே, 2023–2024 நிதியாண்டில், இருதரப்பு வர்த்தகம் 136.96 மில்லியன் டாலராக இருந்தது. இந்தியா மருந்துகள், பீங்கான் பொருட்கள், இரும்பு மற்றும் எஃகு, ஜவுளி, ரசாயனங்கள் மற்றும் இயந்திரங்களை சைப்ரஸுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
2022 ஆம் ஆண்டு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. அதன்படி, தற்போது கெய்ரோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியில் உள்ள சைப்ரஸுக்கான இந்திய பாதுகாப்பு ஆலோசகர், பாதுகாப்பு ஒருங்கிணைப்பை மேற்பார்வை செய்து வருகிறார்.
சைப்ரஸில் வசிக்கும் 11,000 க்கும் மேற்பட்ட இந்தியர்களில் பெரும்பாலோர் கப்பல் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், விவசாயம், வீட்டுச் சேவைகள் மற்றும் உயர் கல்வி போன்ற துறைகளில் பணிபுரிகின்றனர். இவர்களை அங்கீகரிக்கும் விதமாக, ஸ்டார்ட்அப் இந்தியா மற்றும் இன்வெஸ்ட் சைப்ரஸ் ஆகியவை இருதரப்பு ஸ்டார்ட்அப் திட்டங்களை உருவாக்குவதில் இரு தரப்பும் முயற்சி செய்து வருகின்றன.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் சைப்ரஸ் வழியாக இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் G20 திட்டமான இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்துக்கு (IMEC) சைப்ரஸ் முக்கியமாகப் பங்கு வகிக்கிறது.
கிழக்கு மத்தியதரைக்கடலில் குறிப்பிடத்தக்க கடல்சார் எரிசக்தி வளங்களின் தாயகமாக சைப்ரஸ் உள்ளது. – ஆனால், அவற்றில் எதையும் துருக்கியுடன் சைப்ரஸ் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்நிலையில், எரிசக்தி இறக்குமதியை பன்முகப்படுத்துவதற்கான நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்தியா, சைப்ரஸில் கால் பதித்துள்ளது.
2026ம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் சைப்ரஸ் தீவுக்குப் பிரதமர் மோடியின் பயணம், இந்திய-ஐரோப்பிய ஒன்றிய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளே துருக்கியின் மிகப்பெரிய தலைவலி ஆகும். இந்தியாவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக ஆர்மீனியா உள்ளது. குறிப்பாக, 2022-2024 க்கு இடையில் ஆர்மீனியாவின் பாதுகாப்பு இறக்குமதிகளில் இந்தியாவின் பங்கு 43 சதவீதம் ஆகும். இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தில் கிரீஸ் இணைந்துள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் பிரதமர் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணமான சைப்ரஸ் பயணம் சர்வதேச ஆதரவைப் பெறும் இந்தியாவின் முயற்சியில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். இனி, இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்ட துருக்கி, விரைவில் அனைத்து பக்கங்களிலிருந்தும் மூச்சுத் திணறத் தாக்குதலுக்கு உள்ளாகும் என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.