பாகிஸ்தான் உடனான சண்டையில் அமெரிக்காவின் பங்கு இல்லையென்றும், இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டுள்ள வீடியோவில், ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அதிபர் டிரம்ப் அமெரிக்காவிற்கு திரும்பியதால் சந்திப்பு நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அதிபர் டிரம்பின் வேண்டுகோளின் பேரில், இரு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியதாக விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். 35 நிமிடங்கள் நடந்த தொலைபேசி உரையாடலின்போது, பாகிஸ்தான் உடனான மத்தியஸ்தம் குறித்து அமெரிக்காவால் எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என பிரதமர் மோடி தெளிவாக எடுத்துரைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை இரு ராணுவங்களுக்கு இடையே நேரடியாக நடந்ததாகவும், அதுவும் பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் நடத்தப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறியதாக விக்ரம் மிஸ்ரி குறிப்பிட்டார்.
இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்கவில்லை என அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி தெளிவுப்படுத்தியதாகவும், விக்ரம் மிஸ்ரி கூறினார்.