சேலம் மாநகராட்சியின் அடையாளங்களில் ஒன்றான வ.உ.சி சந்தையில் மலைபோல குவிந்திருக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. டன் கணக்கில் கொட்டப்படும் குப்பைகளை நாள்தோறும் அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாநகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் இந்த வ.உ.சி சந்தைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சிறு,குறு வணிகர்களும், பொதுமக்களும் வந்து செல்லும் முக்கிய இடமாக இருக்கிறது. காய்கறி, பூ, பழங்கள், மீன், இறைச்சி என பல்வேறு விதமான கடைகள் ஒரே இடத்தில் இயங்கி வருவதால் அங்குச் சேரும் குப்பைகளின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாள்தோறும் டன் கணக்கில் குவியும் குப்பைகளை ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அகற்றுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்லும் இடமான இந்த சந்தையில் மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. அதோடு காய்கறி மட்டுமல்லாது இறைச்சிக் கழிவுகளும் ஒரே இடத்தில் கொட்டப்படுவதால் பொதுமக்களுக்கு எளிதாக நோய்த்தொற்று பரவும் சூழல் உருவாகியுள்ளது.
சந்தையில் குவிக்கப்படும் குப்பைகளை நாள்தோறும் அகற்ற வேண்டும் எனப் பலமுறை புகார் தெரிவித்தும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் அதற்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் சேலத்தின் மையப்பகுதியில் இருக்கும் மார்க்கெட்டின் சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டிய அவசியத்தை இனியாவது சேலம் மாநகராட்சி நிர்வாகம் உணர வேண்டும் என்ற கோரிக்கை அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.