சென்னையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் உரிய நேரத்தில் பணிகள் முடிக்கப்படாதது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நுங்கம்பாக்கம் என்பது சென்னையின் மையப்பகுதி என்பதைத் தாண்டி நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் பிரதான பகுதியாக அமைந்திருக்கிறது. அப்படியான பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் பள்ளம் மேடுகள், பணிகள் முடிந்தும் மூடப்படாத பள்ளங்கள் எனச் சாலைகளில் பயணிக்கவே வாகன ஓட்டிகள் அச்சப்படும் சூழலை உருவாக்கியுள்ளது. வள்ளுவர் கோட்டம் சாலையில் தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் மாதங்கள் பல கடந்தும் நிறைவடையாமலே காட்சியளிக்கிறது.
குறிப்பிட்ட காலங்களுக்குள் முடிக்கப்பட வேண்டிய மழைநீர் வடிகால் பணிகள் மழைக்காலம் முடிந்தும் தொடர்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் அரை மணி நேரம் மழைபெய்தாலே மழைநீர் குளம் போலத் தேங்கியிருக்கும் வள்ளுவர் கோட்டம் சாலையில், பள்ளம் எது? மேடு எது? எனத் தட்டுத்தடுமாறியே பயணிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
காலை 7 முதல் 9 மணி வரையிலும் மாலை 4 முதல் 7 மணி வரையிலும் பள்ளி கல்லூரிக்குச் செல்வோர், பணிக்குச் செல்வோர் என ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் இந்த சாலையில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் மழைநீர் வடிகால் பணிக்கென பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் நிலையிலும், அப்பணிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிக்கப்படாமல் இருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே வெளிப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.