தேனி அருகே பணியில் உள்ள காவல்துறை அதிகாரியே போலி ஆவணங்களைத் தயாரித்து, ஓய்வுபெற்ற காவலரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் சார்பு ஆய்வாளரான கோவிந்தராஜன் என்பவருக்கும், வீட்டின் அருகே வசிக்கும் விஜயராஜேஸ்வரி என்பவருக்கும் இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
அடியாட்களுடன் வந்து வீட்டை அடித்து உடைத்து விஜயராஜேஸ்வரி மிரட்டல் விடுத்ததாக 2022ஆம் ஆண்டு கண்டமனூர் காவல் நிலையத்தில் கோவிந்தராஜ் புகார் கொடுத்திருந்தார். அப்போது, கண்டமனூர் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் என்பவர் கோவிந்தராஜனின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு வழக்கை முடித்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சார்பு ஆய்வாளர் பிரேம் ஆனந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, சார்பு ஆய்வாளர் பிரேமானந்த் மீது மூன்று பிரிவுகளில் கண்டமனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு 10 நாட்கள் ஆகியும் பிரேம் ஆனந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேனி எஸ்பி அலுவலகத்தில் கோவிந்தராஜ் மனு அளித்துள்ளார்.