தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக விளக்கமளித்து சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.
சன் டிவி நிறுவன பங்குகளை மோசடி செய்து கலாநிதிமாறன் கைப்பற்றியதாக திமுக எம்.பியும், கலாநிதிமாறனின் சகோதரருமான தயாநிதிமாறன் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இவரின் குற்றச்சாட்டுகள் காரணமாக மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் சன் டிவி நிறுவன பங்கு கடுமையான சரிவைச் சந்தித்தது.
இதற்கிடையே, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தை நிர்வாகத்திற்கு சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், திமுக எம்.பி தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுகள் தவறானவை, அவதூறானவை மற்றும் ஆதாரமற்றவை என சன் டிவி நெட்வொர்க் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது
மேலும் அந்த கடிதத்தில், இது குடும்ப விவகாரம் மட்டுமே எனவும் தற்போதுள்ள பிரச்சனைக்கும், வர்த்தகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்துள்ள சன் டிவி நெட்வொர்க் பங்கு பரிமாற்றத்தில் பின்பற்ற வேண்டிய அனைத்து சட்ட நடவடிக்கைகளும் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.
தயாநிதிமாறனால் கூறப்படும் பிரச்சனைகள் அனைத்தும் 22 ஆண்டுகளுக்கு முன்பு பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக இருந்தபோது நடந்தவை எனவும் சன் டிவி நெட்வொர்க் நிறுவனம் தனது விளக்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளது.