திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம், ஒன்றிய செயலாளர் சரத் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஒன்றிய செயலாளர் சரத், இந்து முன்னணி அமைப்பு பொறுப்பாளர்களான வினோத் உள்ளிட்டோரை ஒருமையில் பேசி விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத் உள்ளிட்டோர், தங்களைத் தரக்குறைவாகப் பேசியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. இதில் காயமடைந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத், சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலையத்திலும் இரு தரப்பினரிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலர், திண்டுக்கல் – கரூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்குப் போட்டியாக இந்து முன்னணி மற்றும் பாஜக-வைச் சேர்ந்தவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டு அக்கட்சியினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் மீண்டும் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் ஒருவர், பாஜக மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகனைத் தடியால் அடித்துள்ளார். இதில் பாலமுருகனின் மண்டை உடைந்து ரத்த வடிந்த நிலையில், அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பாஜக-வை சேர்ந்தவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். இதனால் கலவரத்தைக் கட்டுப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து இந்து முன்னணி மற்றும் பாஜக அமைப்பைச் சேர்ந்தவர்களையும் போலீசார் அப்பகுதியிலிருந்து வெளியேற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பதற்றமான சூழலும் நிலவியது.