கோவை மாவட்டம், வால்பாறை அருகே சிறுத்தை இழுத்துச் சென்ற சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.
பச்சமலை எஸ்டேட் பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் – மொனிகா தம்பதி தங்களது 7 வயது மகள் ரோஸினி குமாரியுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையைச் சிறுத்தை ஒன்று கவ்வியது. இதனைக்கண்ட சிறுமியின் தாய் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்க முயன்ற போது சிறுத்தை வனப்பகுதிக்குள் சிறுமியை இழுத்துச் சென்றது.
பின்னர் இது குறித்து அறிந்த வனத்துறை மற்றும் காவல்துறை மோப்ப நாய் உதவியுடன் சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
18 மணி நேர தேடுதலுக்குப் பின் சிறுமியின் தலை மற்றும் உடல் பாகங்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டன. இதனை மீட்ட போலீசார் பொதுமக்கள் வெளியில் வரும் போது கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.